Wednesday, April 12, 2023

வீடு கட்டும் முன்பு செய்ய வேண்டிய பரிசோதனைகள்

வீடு கட்டும் முன்பு செய்ய வேண்டிய பரிசோதனைகள்
செய்ய வேண்டிய பரிசோதனைகள் :

🏡 மண் பரிசோதனை

🏡 நீர் பரிசோதனை

மண் பரிசோதனை :

🏡 வீடு கட்டும் முன்பு மண் மற்றும் நீர் பரிசோதனை செய்வது அவசியம். பரிசோதனை செய்யாமல் விட்டுவிட்டால், எவ்வளவு தரமான கட்டுமானப் பொருட்களைக் கொண்டு கட்டினாலும் வீடு விரைவிலேயே சேதம் அடையக்கூடும்.

🏡 மண் பரிசோதனை மண்ணின் தன்மையை பகுத்தாய்கிறது. இதில் ஏதாவது மாற்றம் இருந்தால், வீட்டின் கட்டுமான முறையில் நிச்சயம் மாற்றம் செய்ய வேண்டி இருக்கும். மண் பரிசோதனையின் அடிப்படையில் தான் பொறியாளர்கள் கட்டிடத்தின் அடித்தளம், அமைப்பை இறுதி செய்வார்கள்.
🏡 வீடு கட்டப்போகும் இடம் களிமண் தரையாக இருந்தால் அது ஈரப்பதத்துக்கு ஏற்ப சுருங்கி விரியும் தன்மையுடன் இருக்கும். இதுபோன்ற நிலத்தில் எப்படி கட்டுமானத்தை எழுப்ப வேண்டுமோ அதன்படி பொறியாளர்கள் அமைப்பார்கள். 

🏡 எனவே வீடு கட்டுவதற்கு முன்பாகவே மண் பரிசோதனை செய்வது அவசியம். இப்போது எல்லா இடங்களிலும் மண் பரிசோதனை நிலையங்கள் இருப்பதால் சுலபமாக பரிசோதனை செய்துவிடலாம். மண் பரிசோதனை அறிக்கையின் நகலையும் வாங்கி வைப்பது மிகவும் நல்லது. 

🏡 மண் மற்றும் நீரின் தரம் எவ்வாறு உள்ளது என்பதை கண்ணால் மட்டுமே பார்த்து முடிவு செய்துவிட முடியாது. லட்சக்கணக்கில் செலவு செய்து கட்டும் வீட்டுக்குக் குறைந்த செலவில் இவை இரண்டையும் பரிசோதிப்பது நம் வீட்டுக்கு நல்லது.

🏡 வீடு கட்டப் பொறியாளரையோ, மேஸ்திரிகளையோ அணுகும்போதே மண், நீர் பரிசோதனை பற்றி பேசுவது மிகவும் நல்லது. அடுக்குமாடி வீடு வாங்கப் போகிறீர்கள் என்றால், மண் மற்றும் நீர் பரிசோதனை செய்யப்பட்டதா, அப்படிச் செய்திருந்தால், அதன் நகலை கேட்டு வாங்கி சரிபார்த்துக் கொள்ளுங்கள். 
🏡 கடந்த சில பத்தாண்டுகளாக மழை வெள்ளம், புயல் என அடிக்கடி இயற்கைச் சீற்றத்துக்கு ஆளாகிவருகிறோம். பூகம்பத்தாலும் பாதிப்புகள் நடப்பதைப் பார்க்கிறோம். சில தவறான கட்டுமானத்தாலும் விபத்துகள் நடக்கின்றன. இந்த இடத்தில்தான் நம் வீட்டின் கட்டுமானம் குறித்துக் கவனம் கொள்ள வேண்டும். வீட்டுக்கு அவசியமானது அடித்தளக் கட்டுமானம்.

🏡 எவ்வளவுதான் பார்த்துப் பார்த்துக் கட்டினாலும் அந்தக் கட்டுமானம் உறுதியாக நிற்பதற்கு அடித்தளக் கட்டுமானம் வலுவாக இருப்பது அவசியம். அப்படியான வலுவான கட்டுமானம் அமைக்கச் சில விஷயங்களை நாம் கவனிக்க வேண்டும்.
🏡 முதலில் நாம் கட்டும் வீடு பல ஆண்டுகளுக்கு நிலைக்க வேண்டும் என்று நினைப்போம். அதற்கு வலுவான அஸ்திவாரம் அவசியம். மொத்தக் கட்டிடத்தையும் தாங்கி நிற்பது அஸ்திவாரம்தான். எனவே, அஸ்திவாரம் வலுவானதாக மட்டுமல்ல, மிகவும் ஆழமாகவும் அமைக்கப்பட வேண்டும்.

🏡 எந்தப் பகுதியில் வீடு கட்டுகிறோமோ அந்தப் பகுதியின் மண்ணின் தன்மையைப் பற்றி ஆராய வேண்டும். ஒவ்வொரு மண்ணின் தன்மையும் ஒவ்வொரு விதமாகக் கட்டிடத்தைத் தாங்கும் தன்மை கொண்டது. எனவே, மண்ணின் தாங்கு திறனைப் பொறுத்தே கட்டிடத்தின் பாதுகாப்பும் உறுதி செய்யப்படும். மண்ணின் தாங்கு திறனில் குறைபாடு இருந்தால் கட்டிடத்தில் சிக்கல் வந்துவிடும்.

🏡 நீங்கள் வீடு கட்டவிருக்கும் நிலத்தில் மண் பரிசோதனை செய்வது அவசியமானது. அந்த மண் பரிசோதனை அடிப்படையில்தான் அடித்தளக் கட்டுமானம் அமைக்க வேண்டும். சில அடுக்குமாடிக் கட்டிடம் விழுந்து விபத்துக்குள்ளாவது மண் பரிசோதனை அடிப்படையில் கட்டாதது தான் காரணம் .

🏡 மண் பரிசோதனை செய்வதன் மூலம் மண்ணின் தாங்கு தன்மையைக் கண்டறிய முடியும். அதற்கு ஏற்றாற்போல வலுவான தாங்கும் தூண்களையும், அஸ்திவாரத்தை அமைக்க முடியும் என்பதால், மண் பரிசோதனையில் சமரசம் செய்துகொள்ளாதீர்கள். மழை, வெள்ளம், நிலநடுக்கம் என எந்த இயற்கைப் பேரிடர்கள் ஏற்பட்டாலும், அதைத் தாங்கும் வகையில் அஸ்திவாரம் இருக்க வேண்டும். அதற்கு மண்ணின் தன்மையை ஆராய வேண்டும்.
🏡 கட்டுமானம் நடைபெறும் இடத்தில் உள்ள மண் எந்த வகையானது, அது அஸ்திவாரத்துக்கு உறுதுணையாக இருக்குமா என்பதையெல்லாம் உறுதி செய்ய வேண்டும். அடுக்குமாடிக் குடியிருப்புகள் பெருகிவிட்ட இந்தக் காலகட்டத்தில் வீடு கட்டுபவர்கள் கட்டாயம் மண் பரிசோதனையில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.

🏡 தனி வீட்டைவிட அதிக வீடுகள் கட்டப்படும் என்பதால் மண்ணின் தாங்கும் திறன் எவ்வளவு, அடுக்குமாடி அமைந்துள்ள இடத்தின் மண் தன்மை எப்படி உள்ளது, அஸ்திவாரம் எவ்வளவு ஆழத்தில் போடப்பட்டுள்ளது என்பதில் கவனம் தேவை.

🏡 மண் எவ்வளவு எடையைத் தாங்கும் என்பதை மதிப்பீடு செய்து, அதற்கு ஏற்ப கட்டிடத்தின் உயரத்தை எழுப்ப வேண்டும். அப்படி பரிசோதிக்காமல் கட்டிடத்தை கட்டினால் இயற்கைப் பேரிடர் ஏற்படும்போது பெரும் பாதிப்பை ஏற்படுத்திவிடும். 

🏡 மண் பரிசோதனை என்றால் மனையில் உள்ள மண்ணை எடுத்துக் கொடுப்பது அல்ல. மனையில் சில மீட்டருக்குத் துளையிட வேண்டும். ஒரு இடத்தில் மட்டுமல்லாமல் மனையின் பல இடங்களில் மண்ணை எடுத்துப் பரிசோதிப்பது மிக அவசியம். பல இடங்களில் மண்ணை எடுப்பதற்கும் ஒரு காரணம் உண்டு. மனையின் மேல் மட்டத்தில் ஒருவகை மண் இருக்கும். உள்ளே வேறு வகை மண் இருக்கலாம். 

🏡 தற்போது இருக்கும் பல மனைகளும் பள்ளமான இடத்திலேயே உள்ளன. அந்த இடத்தை விற்பவர்கள் பள்ளமான மனையில் மண்ணை நிரப்பி மேடாக்குகிறார்கள். இதுபோன்ற மனையில் கூடுதல் கவனம் தேவை. வெவ்வேறு மண் கலந்திருப்பதால் அதன் மண்ணின் தாங்கு திறன் எந்த அளவுக்கு இருக்கும் என்பதை துல்லியமாகத் தெரிந்துகொள்ள வேண்டும்.

🏡 இதுபோன்ற மனையில் ஆழமாகப் பள்ளம் தோண்டி மண்ணை எடுத்து பரிசோதனைக்கு அனுப்புவதே நல்லது. சென்னையில் வெள்ளம் சூழ்ந்த இடங்கள் எல்லாமே ஏரிக்கு அருகேயோ, நீர் நிலைகளுக்கு அருகேயோ இருந்தவைதான்.

🏡 ஏற்கெனவே நீர் நிலைப் பகுதிகளாக இருந்திருந்தால் மண் பரிசோதனை செய்து மண்ணின் தாங்கு திறனை மதிப்பிட வேண்டும். இங்கே மிக ஆழமான அஸ்திவாரத்தை அமைத்தே வீடு கட்ட வேண்டும். 

🏡 அதுமட்டும்மின்றி, இப்போது விளை நிலங்களில்கூட கட்டுமானங்கள் நடைபெறுகின்றன. விவசாய மண் எந்த ரகத்தைச் சேர்ந்தது என்பதைப் பரிசோதித்துப் பார்க்க வேண்டும். அங்கே கட்டிடம் கட்டும் அளவுக்கு மண்ணின் தன்மை உள்ளதா என்பதை முன்கூட்டியே ஆராய்ந்து கொள்ள வேண்டும்.

🏡 ஏனெனில் கட்டிடம் கட்டும் இடம் விவசாய நிலமாக இருந்து குடியிருப்பு இடமாக மாற்றம் செய்யப்பட்டு இருக்கலாம். அத்தகைய இடத்தில் இருக்கும் மண் எந்த வகையை சார்ந்தது என்பதை பரிசோதித்து தெரிந்து கொள்ள வேண்டும். 

🏡 அந்த மண் ரகம் கட்டிடம் கட்டுவதற்கு தகுதி வாய்ந்ததா? என்பதை உறுதி செய்து கொள்வது அவசியம். அந்த மண் ஈரப்பதத்தை உறிஞ்சும் தன்மையை ஆய்வு செய்ய வேண்டும். விவசாயத்துக்கு தக்கபடி ஈரப்பதத்தை தக்கவைக்கும் தன்மை கொண்டதாக இருந்தால் மழைக்காலங்களில் பிரச்சினை ஏற்பட வாய்ப்பு உள்ளது. ஆகவே மண்ணின் தன்மையை அறிந்து கொள்ள கட்டாயம் மண்பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.

🏡 விவசாய நிலங்களில் உள்ள மண் ஈரப்பதத்தை உறிஞ்சும் தன்மையைச் சோதிக்கப் பார்க்க தவற வேண்டாம். ஒரு வேளை ஈரப்பதத்தைத் தக்கவைக்கும் தன்மை இருந்தால் மழைக் காலங்களிலோ, வெள்ளக் காலத்தில் வீட்டைச் சுற்றி தண்ணீர் சூழந்தாலோ பிரச்சினை ஏற்பட வாய்ப்பு உண்டு. இதுபோன்ற மண்ணில் தாங்கு திறனைவிட மிக வலுவான அஸ்திவாரம் அமைப்பதே நல்லது. ஏற்கெனவே வீடு கட்டி முடித்துவிட்டால் அஸ்திவாரத்தை வலுப்படுத்த வேண்டும்.

நீர் பரிசோதனை :

🏡 கிணற்று நீர் அல்லது போர்வெல் நீரை குடிநீராக பயன்படுத்தும்போது ஒரு லிட்டரில் 1.5 மி.கிராம் அளவிற்கு மேலாக புளோரைடு இருப்பது அல்லது நைட்ரேட்டு போன்ற இரசாயனங்கள் கலந்திருக்க கூடாது. அவ்வாறு இருப்பின் நீரை குடிப்பவர் உடல்நலம் பாதிக்கப்படும் வாய்ப்புகள் உள்ளன. 

🏡 மேல்நிலை தொட்டிகளில் காற்று, சூரிய ஒளி ஆகியவை தொடர்ந்து படியும் காரணத்தால், பாசிகள் உருவாகின்றன. அதனால், காற்று, சூரிய ஒளி ஆகியவை படியாதவாறு தொட்டிகளை மூடி வைக்கலாம். கிணறுகள் அல்லது நீர் தொட்டிகளில் சிறிதளவு பிளீச்சிங் பவுடர் கலக்கலாம். அதாவது 100 லிட்டர் தண்ணீருக்கு 30 விழுக்காடு திறன் உள்ள பிளீச்சிங் பவுடர் 1 கிராம் என்ற அளவில் சேர்த்து பாசிகள் படிவதை தடுக்க முடியும்.

🏡 நீரின் காரத்தன்மை அதிகமாக இருந்தாலும், இரும்பு போன்றவை கலந்திருந்தாலும் அந்த நீரை பயன்படுத்தும்போது உணவு மற்றும் ஆடைகளில் பழுப்பு நிறம் படிகிறது. அதனால், அத்தகைய இரசாயன பாதிப்புகளை அகற்றும் சுத்திகரிப்பு முறைகளை பயன்படுத்த வேண்டும்.

🏡 அதுமட்டுமின்றி செப்டிக் டேங்க் மற்றும் போர்வெல் இடையே சுமார் 50 அடி இடைவெளி இருப்பது பாதுகாப்பானது.

🏡 தொழிற்சாலை கழிவுகள், வீட்டு உபயோக கழிவுகள், கால்நடை கழிவுகள், நீர்நிலை ஆதாரங்களில் கலக்கும் நிலையில் பாதுகாப்பான தூரத்தில் போர்வெல் அமைப்பது நல்லது. 

🏡 போர்வெல் தண்ணீர் அல்லது கிணற்று நீரை பரிசோதித்து, அதிலுள்ள உப்புக்களின் வகைகளை அறிந்துகொண்டு புழங்குவதற்கு அல்லது குடிப்பதற்கு உகந்ததா? என்பது பற்றி தெரிந்து கொள்ள நீர், நில வேதியியல் பரிசோதனை கூடங்களை தமிழகத்தின் ஒவ்வொரு மாவட்டத்திலும் அரசு அமைத்துள்ளது.

xxxxxxxxxxxxxxxxccccccccccccxxxxxxxxxxxx
Please Support our social media
YouTube
 Sree Kongu Promoters :
https://www.youtube.com/channel/UCgvTYOM6kXd0T6c7wxc10GQ?sub_confirmation=1 
Sree Kongu Foundation : https://youtube.com/playlist?list=PLdQAT38HhXc1J9u-y-OXvW9Ud2eHRgrzB  

Blog : 
http://sreekongupromoterskovai.blogspot.com
Facebook : 
https://www.facebook.com/sreekongupromoterskovai
Instagram : 
https://www.instagram.com/sreekongupromoterskovai
Twitter:
www.twitter.com/srkonguprokovai

No comments:

Post a Comment